பலாலி மக்கள் 13 ஆவது வாரமாக போராட்டம்!
Ad Space
Ad Space
Ad Space
வலிகாமம் வடக்கு பலாலி பகுதியில் இராணுவப் பயன்பாட்டில் உள்ள தமது பூர்வீக காணிகளை மீளக் கையளித்து, தமது சொந்த இடங்களில் மீள்குடியேற அனுமதிக்க வேண்டும் எனக் கோரி, காணி இழந்த பலாலி மக்கள் 13 ஆவது வாரமாகவும் தொடர் கவனயீர்ப்புப் போராட்டத்தை இன்று ஞாயிற்றுக்கிழமை (13) முன்னெடுத்துள்ளனர்.பலாலி சந்தி பகுதியில் நடைபெற்ற இந்த அமைதிவழிப் போராட்டத்தில், பல தசாப்தங்களாகத் தமது பூர்வீக நிலங்களையும் வீடுகளையும் இழந்து வாழும் மக்கள் பங்கேற்று, காணிகளை விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.“எங்கள் நிலங்கள் எங்களுடையதுதானே, அது எப்படி உங்களுடையதாகும்?”, “எங்கள் பூர்வீக நிலங்களை எங்களிடம் ஒப்படை!”, “மக்களின் நிலம் மக்களிடம் ஒப்படைக்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே?” உள்ளிட்ட பல கோஷங்களை எழுப்பியவாறு போராட்டக்காரர்கள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.பல தசாப்தங்களாக தமது சொந்தக் காணிகளை இழந்து, முகாம்கள், வாடகை வீடுகள் மற்றும் உறவினர்களின் வீடுகளில் வாழ வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக போராட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் கவலை தெரிவித்தனர்.மேலும், தமது காணிகளை மீள வழங்குவதாக தேர்தல் காலங்களில் அரசியல்வாதிகள் வழங்கிய வாக்குறுதிகள் இதுவரை முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை எனவும் போராட்டக்காரர்கள் குற்றஞ்சாட்டினர்.இதேநேரம் தமது பூர்வீகக் காணிகளை விடுவிப்பது வெறுமனே காணி உரிமை தொடர்பான பிரச்சினை அல்ல என்றும், அது தமது வாழ்வுரிமை, வாழ்வாதாரம் மற்றும் எதிர்கால சந்ததிகளின் உரிமையுடன் தொடர்புடையது என்றும் மக்கள் வலியுறுத்தினர்.இதனிடையே, பலாலி கிழக்கு பகுதியில் உள்ளிட்ட சில பகுதிகளை செப்ரெம்பர் மாதத்தில் பொதுமக்களின் மீள்குடியேற்றத்துக்காக விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக அரசாங்கத் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், அந்த நடவடிக்கைகள் தாமதமின்றி நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் எனவும்.போராடும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Ad Space
Ad Space
Ad Space