ஜனநாயகம் சீர்குலைவது குறித்தும் கவனம் செலுத்த வேண்டும். நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை அதிகரிப்பது போன்ற அரசியலமைப்பு ரீதியான மாற்றங்கள் அவசரமாகவோ அல்லது அரசியல் தேவைகளுக்காகவோ செய்யப்படக் கூடாது. இவ்வாறான முயற்சிகளை அரசாங்கம் கைவிட வேண்டும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி ரஜீவ் அமரசூரிய தெரிவித்தார்.
இலங்கை மன்றக் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை (19) நடைபெற்ற இலங்கை இளம் சட்டத்தரணிகள் சங்கத்தின் வருடாந்த மாநாட்டில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை அதிகரிப்பது போன்ற மாற்றங்கள் அவசரமாகவோ அல்லது அரசியல் தேவைகளுக்காகவோ செய்யப்படக் கூடாது என்று சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ரஜீவ் அமரசூரிய தெரிவித்துள்ளார்.
இலங்கை இளம் சட்டக் சமூகத்தினர் ஏற்பாடு செய்திருந்த 2026 ஆம் ஆண்டிற்கான வருடாந்த இளம் சட்ட மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் குறிப்பிட்டார்.
முறையான மாற்றம் என்ற விடயம் குறித்து நானும் போராட்டக் காலத்தில் கவனம் செலுத்தினேன். அக்காலத்தில் நான் சட்டத்தரணிகள் சங்கத்தின் செயலாளர் பதவியில் இருந்து விலகி, ஒரு சுயாதீன தொழில்முறையாளராகவே செயற்பட்டேன். நானும் காலி முகத்திடல் மேடையில் சில தடவைகள் உரையாற்றியுள்ளேன்.
நமது நாடு வீழ்ந்திருந்த படுகுழியில் இருந்து மீட்டெடுக்கும் பயணம் மாற்றப்பட வேண்டும் என்ற கருத்தில் நானும் இருந்தேன். கடந்த 70 வருடங்களாக நமது நாட்டில் சில முன்னேற்றங்கள் இருந்தன. ஆபிரிக்க நாடுகள் அல்லது இந்தியாவுடன் ஒப்பிடுகையில் நாம் முன்னிலையில் இருக்கிறோம். நமது இலவசக் கல்வி மற்றும் சுகாதாரச் சேவை மீது எனக்கு பெரிய நம்பிக்கை உள்ளது. ஆனால் நமக்கு பிரச்சினைகளும் இருந்தன.Geographic Reference
ஊழல் மற்றும் நிறுவன ரீதியான திறமையின்மை நமக்கு பெரிய இழப்பாக அமைந்தது. பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நல்ல ஊதியம் வழங்கப்பட வேண்டும். இல்லையெனில் திறமையானவர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள். அரசியலமைப்பு வாதம் என்பது ஜனநாயகத்தின் ஊடாக மனித உரிமைகள் நசுக்கப்படுவதைத் தடுக்கும் ஒரு பாலம் போன்றதாகும்.
ஜனநாயகம் சீர்குலைவது குறித்தும் நாம் கவனம் செலுத்த வேண்டும். நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை அதிகரிப்பது போன்ற அரசியலமைப்பு ரீதியான மாற்றங்கள் அவசரமாகவோ அல்லது அரசியல் தேவைகளுக்காகவோ செய்யப்படக் கூடாது.
நீதித்துறை சுதந்திரமாக செயற்பட வேண்டும். யார் ஆட்சியில் உள்ளார்கள் என்பது எமக்கு முக்கியமல்ல.ஆனால் நீதித்துறை சுயாதீனமாக செயற்பட வேண்டும்.நாட்டு மக்கள் அனைவரும் நீதித்துறையின் மீது முழுமையானதும், இறுதியுமானதுமான நம்பிக்கையை கொண்டுள்ளார்கள். மக்களின் நம்பிக்கையை பாதுகாக்க வேண்டும். அந்த பொறுப்பு சட்டத்தரணிகள் சமூகத்துக்கு உண்டு என்றார்.