தென்னாப்பிரிக்காவின் வெஸ்டர்ன் கேப் மாகாணத்தில் அமைந்துள்ள பிரதான நெடுஞ்சாலையில் இரண்டு வேன்கள் மற்றும் கார் ஆகிய வாகனங்கள் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளானதில் குறைந்தது 21 பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர் பலத்த காயமடைந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.கேப் டவுன் நகருக்கு கிழக்கே சுமார் 380 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள 'பிரின்ஸ் ஆல்பர்ட்' மற்றும் 'லீவ்-கம்கா' பகுதிகளுக்கு இடைப்பட்ட N1 நெடுஞ்சாலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு இக்கோர விபத்து இடம்பெற்றுள்ளது.இரு வேன்கள் முதலில் நேருக்கு நேர் மோதிக்கொண்டதாகவும், அதனைத் தொடர்ந்து பின்னால் வந்த எஸ்.யு.வி கார் அவற்றின் மீது மோதி விபத்து தீவிரமடைந்ததாகவும் வெஸ்டர்ன் கேப் மாகாண போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது.விபத்து நடந்த இடத்திலிருந்து மீட்கப்பட்டு தீவிர சிகிச்சைக்காக வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டவர்களில் மூவர் வழியிலேயே உயிரிழந்ததாகப் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.விபத்தைத் தொடர்ந்து N1 நெடுஞ்சாலை தற்காலிகமாக மூடப்பட்டு, வீதிப்  போக்குவரத்து முகாமைத்துவ அமைப்பினால் முறையான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.இதேவேளை, கடந்த 05 ஆம் திகதி இரவு ஆபிரிக்க கண்டத்தின் 'கேப் வெர்டே' தீவுக்கூட்டத்தின் 'போகோ' தீவில், பாடசாலை மாணவர்கள் சென்ற பேருந்து ஒன்று 30 மீற்றர் ஆழமான பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மாணவர்கள் உட்பட 25 பேர் உயிரிழந்தனர்.இச்சம்பவத்தைக் குறித்து நாட்டின் ஜனாதிபதி ஹோசே மரியா பேரெய்ரா நெவஸ் "பெரும் பேரழிவு" எனத் இரங்கல் தெரிவித்துள்ளதுடன், இருநாட்கள் தேசிய துக்க தினமும் அனுஷ்டிக்கப்பட்டது. உயிரிழந்தவர்களுக்கான கூட்டு இறுதி அஞ்சலி பிரார்த்தனைகள் ஞாயிற்றுக்கிழமை சாண்டியாகோ நகரில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.