சட்டவிரோதமான முறையில் ஈட்டப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் இரு நபர்களுக்குச் சொந்தமான சுமார் 14 கோடி ரூபாய்  பெறுமதியான சொத்துக்களைப் பொலிஸ் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பணியகம் முடக்கியுள்ளது.பணத்தூய்தாக்கல் தடுப்புச் சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், இந்த சொத்துக்களை 14 நாட்களுக்கு விற்பனை செய்வதோ அல்லது கைமாற்றுவதோ தடுத்து நிறுத்தப்பட்டு முடக்கல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.போதைப்பொருள் கடத்தல் மூலம் சட்டவிரோதமாக ஈட்டிய பணத்தில் வாங்கப்பட்ட வத்தளை மற்றும் ஹுணுபிட்டி பகுதிகளைச் சேர்ந்த 4 காணிகள், இருமாடி வீடு உள்ளிட்ட கட்டடங்கள் மற்றும் கார் ஒன்று என 900 இலட்சம் ரூபா பெறுமதியான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.ஹுணுபிட்டியில் 7 பேர்ச்சஸ் காணி மற்றும் இருமாடி வீடு (400 இலட்சம் ரூபா), வத்தளையில் 17 பேர்ச்சஸ் காணி மற்றும் இரு வீடுகள் (300 இலட்சம் ரூபா), 5 பேர்ச்சஸ் காணி மற்றும் கட்டடம் (50 இலட்சம் ரூபா), காந்தி மாவத்தையில் 3 பேர்ச்சஸ் காணி மற்றும் கட்டடம் (70 இலட்சம் ரூபா), ஸ்பேசியா ரக கார் (80 இலட்சம் ரூபா முடக்கப்பட்ட சொத்துக்கள் விபரமாகும்.போதைப்பொருள் பணியகத்தின் பணிப்பாளர் வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், தனமல்விலயைச் சேர்ந்த நபர் போதைப்பொருள் வியாபாரம் மூலம் வாங்கிய 350 இலட்சம் ரூபா பெறுமதியான 'டொயோட்டா'  ரக ஜீப் வண்டி நேற்று முன் தினம் செவ்வாய்க்கிழமை (16) முதல் 14 நாட்களுக்கு முடக்கப்பட்டுள்ளது.சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பணியகம் இது தொடர்பான மேலதிக சட்ட நடவடிக்கைகளைத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றது.