இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் கண்டறியப்பட்டுள்ள குகை ஓவியங்கள், மனித நாகரிகத்தின் கலை வரலாற்றில் ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளன.

இந்த கைரேகை ஓவியங்கள் குறைந்தது 67,800 ஆண்டுகளுக்கு முற்பட்டவை என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

இதுவரை கண்டறியப்பட்ட குகைச்சுவர் ஓவியங்களிலேயே இதுதான் மிகவும் பழைமையானது. இதற்கு முன்பு தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட 73,000 ஆண்டுகள் பழமையான குறியீடுகள் கற்களில் செதுக்கப்பட்டவை, ஆனால் குகைச் சுவர்களில் வரையப்பட்ட சிக்கலான கலை வடிவம் இதுவே முதன்மையானது.

குகைச் சுவரில் கைகளை வைத்து, அதன் மேல் நிறமிகளை (Pigment) ஊதி இந்த உருவங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதில் சில விரல் நுனிகள் கூர்மையாகத் தெரியும் வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

இந்தோனேசியா மற்றும் அவுஸ்திரேலிய ஆராய்ச்சியாளர்கள் (கிரிஃபித் பல்கலைக்கழகம்) இணைந்து சுலவேசி தீவின் தென்கிழக்குப் பகுதியில் இந்த ஆய்வை மேற்கொண்டனர்.

ஓவியங்களின் மேல் படிந்திருந்த தாதுப் படிமங்களை ஆய்வு செய்ததன் மூலம் இவற்றின் காலம் கணிக்கப்பட்டது.

இந்த ஆய்வு முடிவுகள் 'நேச்சர்' (Nature) இதழில் புதன்கிழமை (ஜன 21) அன்று வெளியிடப்பட்டது.

இந்த ஓவியங்களை வரைந்தது யார் என்பதில் இன்னும் தெளிவான முடிவு எட்டப்படவில்லை. ஆராய்ச்சியாளர்கள் இரண்டு முக்கியக் கருத்துகளை முன்வைக்கின்றனர்:

01.டெனிசோவன்கள் (Denisovans): அந்தப் பகுதியில் வாழ்ந்து அழிந்துபோன ஒரு பண்டைய மனித இனம்.

02.ஹோமோ சேபியன்கள் (Homo sapiens): ஆப்பிரிக்காவில் இருந்து இடம்பெயர்ந்து மத்திய கிழக்கு மற்றும் அவுஸ்திரேலியா நோக்கிச் சென்ற நவீன மனிதர்கள்.

மனிதர்கள் எப்போது கோடுகளையும் புள்ளிகளையும் தாண்டி, தங்களைப் பற்றியும் தங்களைச் சுற்றியுள்ள உலகத்தைப் பற்றியும் அர்த்தமுள்ள கலைகளை உருவாக்கத் தொடங்கினார்கள் என்பதைப் புரிந்துகொள்ள இந்த கண்டுபிடிப்பு உதவுகிறது. சுலவேசி தீவு ஒரு செழிப்பான கலை கலாச்சாரத்தைக் கொண்டிருந்ததை இது உறுதிப்படுத்துகிறது.