இணுவில் பொதுநூலகக் கனடா அமைப்புக் குழுவின் நிதி அனுசரணையில் இணுவில் இந்துக் கல்லூரியில் தரம்- 01 இல் புதிதாக இணையும் மாணவ, மாணவியர்கள் ஒவ்வொருவருக்கும் 16 ஆயிரம் ரூபா பெறுமதியான கற்றல் உபகரணங்கள் என்ற அடிப்படையில் மொத்தமாக மூன்று லட்சம் ரூபா பெறுமதியான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை (27.01.2026) மாலை-04.30 மணியளவில் இணுவில் பொதுநூலகத் தகவல் தொழில்நுட்ப விரிவுரை மண்டபத்தில் பொதுநூலகத் தலைவர் ம.கஜந்தரூபன் தலைமையில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் இணுவில் பொதுநூலகப் போசகரும், ஆசிரியருமான இரா.அருட்செல்வம் கலந்து கொண்டு இணுவில் இந்துக் கல்லூரியின் பிரதி அதிபர் திருமதி.மிருளாயினி சிவராமகிருஷ்ணனிடம் கற்றல் உபகரணங்களை நேரில் கையளித்தார். இப் பாடசாலையில் தரம்-01 இல் பல மாணவர்களை உள்ளீீர்க்கும் நோக்குடனேயே குறித்த கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, இணுவில் பொது நூலகக் கனடா அமைப்புக் குழு இந்த வருடம் ஆறாவது தடவையாக மேற்படி கல்லூரிக்குக் குறித்த உதவிகளை வழங்கி வைத்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.