கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 'குஷ்' ரக போதைப்பொருடன் இலங்கையர் ஒருவர் இன்று ஞாயிற்றுக்கிழமை  (25) அதிகாலை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் தெல்கொட பகுதியைச் சேர்ந்த 37 வயதுடையவர் எனவும், அவர் இரவு நேர விடுதி ஒன்றில் தனியார் பாதுகாப்பு உத்தியோகத்தராகப் பணியாற்றுபவர் எனவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் இன்று  அதிகாலை 4.00 மணியளவில் ஓமானின் மஸ்கட் நகரில் இருந்து ஓ.வி-437 (OV-437) ரக ஸலாம் எயார் விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

அவரிடமிருந்த இரண்டு பயணப்  பைகளுக்குள் 08 பொதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 08 கோடியே 22 இலட்சம் ரூபா பெறுமதியுடைய 8 கிலோகிராம் 220 கிராம் எடையுடைய 'குஷ்' போதைப்பொருள் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரையும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் தொகுதியையும் மேலதிக விசாரணைகளுக்காக இன்று  நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.