கல்கிசை கடற்கரையோரத்தை அண்மித்த பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 27 சட்டவிரோத ஹோட்டல்கள் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் முழுமையாக அகற்றப்படும். சட்டத்தின் பிரகாரமே உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்று பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.குருநாகல் பகுதியில் இடம்பெற்ற காணி உரித்து பத்திரம் வழங்கும் நிகழ்வில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,பொது மக்களுக்கு சட்டத்தின் பிரகாரம் காணி உரித்து வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கடந்த காலங்களில் காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு ஊடாகவே காணி முறைகேடுகள் இடம்பெற்றன. அரசியல் தலையீடுகளுடன் தான் இவ்வாறான முறைகேடுகள் இடம்பெற்றன. பொலன்னறுவை மாவட்டத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.எம்.சந்திரசேன, துமிந்த திஸாநாயக்க ஆகியோர் அரசியல் அதிகாரத்துடன் அரச காணிகளை கைப்பற்றியுள்ளார்கள். அவர்களுக்கு எதிராகவும் தற்போது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.கடந்த காலங்களில் பிரதான பேசுபொருளாக காணப்பட்ட மல்வானை சொகுசு இல்லம் மற்றும் காணி, கதிர்காமல் பகுதியில் சொகுசு இல்லம் மற்றும் அதனுடனான காணி அரசுடமையாக்கப்பட்டுள்ளது. மல்வானை இல்லத்தை பல்கலைக்கழக விடுதியாக மாற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.நாங்கள் ஆட்சிக்கு வந்து 2 வருட காலத்தில் ஒரு அடி நிலத்தை கூட சட்டவிரோதமான முறையில் எவருக்கும் வழங்கவில்லை. காணி வழங்கல் நடவடிக்கைகள் சட்டத்தின் பிரகாரமே முன்னெடுக்கப்படுகிறது.கல்கிசை கடற்கரையோரத்தை அண்மித்த பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 27 சட்டவிரோத ஹோட்டல்கள் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் முழுமையாக அகற்றப்படும். சட்டத்தின் பிரகாரமே உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்றார்.