‘வளமான நாடு - அழகான வாழ்க்கை’ என்பதை உருவாக்குவதே  தமது  முதலாவது பணியாகும் என மத்திய  மாகாண ஆளுநர்   விசேட வைத்திய நிபுணர்  ஹர்ஷ சுரங்க பெர்னாண்டோ தெரிவித்தார்.

மத்திய மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்ட விசேட வைத்திய நிபுணர்  ஹர்ஷ சுரங்க பெர்னாண்டோ, கண்டியில் அமைந்துள்ள மத்திய மாகாண ஆளுநர் அலுவலகத்தில்  தனது கடமைகளை உத்தியோக பூர்வமாகப் பொறுப்பேற்று உரையாற்றும் போது இதனைத் தெரிவித்தார்.

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க முன்னிலையில் கடந்த  06ம்மிகதி  சத்தியப்பிரமாணம் செய்து கொண்ட பின்னர், புதிய கடமையை ஆரம்பிப்பதற்கு முன்பாக, அவர் ஸ்ரீ தலதா மாளிகைக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டதுடன், அஸ்கிரிய மற்றும் மல்வத்து பிரிவுகளின் அதி வண. மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து ஆசி பெற்றார்.

அத்துடன் சர்வமத இந்து, இஸ்லாம, கத்தோலிக்க மதஸ்தலங்களுக்கும் விஜயம் செய்து  நல்லாசிகளைப் பெற்றதுடன் பிராத்தனைகளிலும்  ஈடுபட்டார். பதவியேற்பின் பின் உரையாற்றிய  ஆளுநர் தெரிவித்தாவது-

தற்போது  மத்திய மாகாணத்தின் ஆரம்பிக்கப்பட்டுள்ள அபிவிருத்திப் பணிகள் மற்றும் ஏனைய செயற்பாடுகளை முறையாகவும், திறமையாகவும், விரைவாகவும் மேற்கொண்டு குறித்த காலத்திற்குள் நிறைவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனக் குறிப்பிட்டார்.

தற்போதைய அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனமான ‘வளமான நாடு - அழகான வாழ்க்கை’ என்பதை உருவாக்குவதற்காக முன்னெடுக்கப்படும் திட்டத்தை மத்திய மாகாணத்திற்குள் செயல்படுத்துவதை முதன்மையான பணியாகக் கருதி,   நடவடிக்கைகள் முன் எடுக்கப்படும் என்றும் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மத்திய மாகாண சபையின் தலைவர் எல்.டீ. நிமலசிரி, கண்டி பிரதி மேயர் ருவன் குமார கலபிட்டிய, மத்திய மாகாண பிரதம செயலாளர் அஜித் பிரேமசிங்க,  கண்டி மாவட்டச் செயலாளர் இந்திக உடவத்த,  ஆளுநர் பதில் செயலாளர் இஷான் விஜேதிலக மற்றும் அமைச்சுக்களின் செயலாளர்கள், திணைக்களங்களின் தலைவர்கள், உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.