பேச்சுவார்த்தைகள் முழுமையாக நிறைவடைந்த பின்னர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விரைவில் ஐக்கிய மக்கள் சக்தி தலைமையகத்துக்குச் செல்வார். அத்தோடு இரு கட்சிகளினதும் செயற்குழுக்களை ஒன்றிணைத்து கூட்டு செயற்குழு கூட்டமொன்றை சிறிகொத்தாவில் நடத்த எதிர்பார்த்துள்ளோம். கூட்டணியின் தலைமைத்துவம் தொடர்பில் இரு தலைவர்களுக்குமிடையிலான தனிப்பட்ட சந்திப்பின் போது தீர்மானிக்கப்படும் என ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி பொதுச் செயலாளர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.
ஐ.தே.க. தலைமையகமான சிறிகொத்தாவில் நேற்று சனிக்கிழமை (24) இரவு இடம்பெற்ற மத வழிபாட்டு நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
புதிய ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொத்தா பெப்ரவரி 4ஆம் திகதி முழுமையாக டிஜிட்டல் மயப்படுத்தப்பட்ட ஒரு தளமாக பரிணமிக்கவுள்ளது. அதற்கான செயற்திட்டங்கள் நிறைவடைந்துள்ளன. ஐ.தே.க.வின் உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு புத்துயிரூட்டும் வகையில் கட்சி மீளக் கட்டியெழுப்பப்படும். ஐக்கிய மக்கள் சக்தியுடனான பேச்சுவார்த்தைகளும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
ஐ.தே.க. செயற்குழுவில் இதுகுறித்த யோசனைகளை நாம் முன்வைத்துள்ளோம். ஐக்கிய மக்கள் சக்தியின் யோசனைகளையும் பெற்றுக் கொள்ள வேண்டியுள்ளது. இந்த பேச்சுவார்த்தைகள் முழுமையாக நிறைவடைந்த பின்னர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விரைவில் ஐக்கிய மக்கள் சக்தி தலைமையகத்துக்குச் செல்வார். அத்தோடு இரு கட்சிகளினதும் செயற்குழுக்களை ஒன்றிணைத்து கூட்டு செயற்குழு கூட்டமொன்றை சிறிகொத்தாவில் நடத்த எதிர்பார்த்துள்ளோம்.
எனவே எம்மிலிருந்து பிரிந்து சென்ற நண்பர்களுடன் மீண்டும் இணைவதற்காக சிறிகொத்தாவை தூய்மைப்படுத்தி அழகுபடுத்தியுள்ளோம். ஐ.தே.க. - ஐக்கிய மக்கள் சக்தி இணைந்த கூட்டணியை அமைப்பதற்கான முயற்சிகள் 99.99 சதவீதம் வெற்றியடைந்துள்ளது.
கூட்டணியின் தலைமைத்துவம் தொடர்பில் இரு தலைவர்களுக்குமிடையிலான தனிப்பட்ட சந்திப்பின் போது தீர்மானிக்கப்படும். அண்மையில் முன்னாள் ஜனாதிபதி ரணில், தான் தற்போது செயற்பாட்டு அரசியலில் இல்லை என்று தெரிவித்திருந்தார்.
அந்த வகையில் அவர் ஒரு ஆலோசகராக செயற்பட்டு இக்கட்சியை மீண்டும் சரியான பாதையில் கொண்டு செல்வதற்கு வழிநடத்துவார். அது மாத்திரமின்றி இருதரப்பு இணக்கப்பாட்டுடன் தலைமைத்துவக்குழுவொன்றும் நியமிக்கப்படும். எது எவ்வாறிருப்பினும் இரு கட்சிகளும் இணைய வேண்டுமென்பதே தற்போதைய அத்தியாவசிய தேவையாகும். அதற்கமைய நிபந்தனையின்றி நாம் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைவோம். அதன் பின்னர் பாரிய பயணமொன்றை ஆரம்பிப்போம்.
நாம் இணைந்தால் அது அரசாங்கத்துக்கு பாரிய சவாலாகும். ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணையும் அதேவேளை, ஏனைய எதிர்க்கட்சிகளையும் இணைத்துக் கொண்டு அரசாங்கத்துக்கு எதிரான பாரிய பலம் மிக்க கூட்டணியொன்றை உருவாக்குவோம். பரந்துபட்ட கூட்டணி எதிரணியொன்றை உருவாக்குவதற்கும் ரணில் விக்கிரமசிங்க எமக்கு ஆலோசனைகளை வழங்குவார் என்றார்.
ரணில் விக்கிரமசிங்க விரைவில் ஐக்கிய மக்கள் சக்தி தலைமையகத்துக்குச் செல்வார்!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space