பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் இந்தியாவின் மும்பை நகரில் தரையிறங்கினார். இந்தியாவிற்கு 3 நாட்கள் சுற்றுப்பயணமாக பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் (Emmanuel Macron) வருகை தந்துள்ளார்.

அவர் AI Impact உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள உள்ளார். மேலும் பிரதமர் நரேந்திர மோடியுடன் இருநாட்டு வர்த்தகம் உள்ளிட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார்.

மும்பை வந்தடைந்த ஜனாதிபதி மேக்ரானை மஹாராஷ்டிரா ஆளுநர் ஆச்சார்யா தேவ்ரத் மற்றும் முதலமைச்சர் தேவேந்திர ஃபட்நவிஸ் ஆகியோர் வரவேற்றனர். இது இமானுவல் மேக்ரானுக்கு நான்காவது இந்திய வருகை மற்றும் மும்பைக்கு முதல் வருகையாகும்.



பிரதமர் நரேந்திர மோடி, இமானுவல் மேக்ரான் இருவரும் லோக் பவனில் பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளனர்.


பின்னர் அவர்கள் இருவரும் 2026ஆம் ஆண்டு இந்தியா-பிரான்ஸ் புதுமை ஆண்டைத் தொடங்கி வைத்து, இரு நாடுகளின் வணிகத் தலைவர்கள் தொடக்க நிறுவனங்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பிற கண்டுபிடிப்பாளர்களின் கூட்டத்தில் உரையாற்றுவார்கள்.

இந்த நிலையில், மேக்ரானை வரவேற்று பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில், "இந்தியாவிற்கு வருக! உங்கள் வருகையையும், நமது இருதரப்பு உறவுகளை புதிய உயரத்திற்கு முன்னேற்றுவதையும் இந்தியா எதிர்நோக்குகிறது.

நமது விவாதங்கள் பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் மற்றும் உலகளாவிய முன்னேற்றத்திற்கு பங்களிக்கும் என்று நான் நம்புகிறேன். மும்பையில் சந்திப்போம் பின்னர் டெல்லியில் சந்திப்போம் என் இனிய நண்பரே" என தெரிவித்துள்ளார்.