கட்டுநாயக்க விமான நிலையத்தில்  'குஷ்'  போதைப்பொருளை கொண்டு வந்த இரண்டு இலங்கை பெண் பயணிகள் விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் இன்று புதன்கிழமை (09) கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்டவர்கள் கொழும்பு, தெமட்டகொடை மற்றும் தொட்டலங்க பகுதிகளைச் சேர்ந்த 33 மற்றும் 35 வயதுடைய பெண்கள் ஆவர்.இவர்கள் இன்று புதன்கிழமை (09) காலை 10:55 மணியளவில் தாய்லாந்தின் பாங்கொக் நகரிலிருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் சேவையின் UL-403 என்ற விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.அவர்கள் கொண்டு வந்த 2 பயணப் பைகளுக்குள், 5 பொதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 5 கோடியே 37 இலட்சத்து 20 ஆயிரம் ரூபா பெறுமதியான  5 கிலோகிராம் 372 கிராம் 'குஷ்' போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.மேலும், கைது செய்யப்பட்ட இரு பெண்களும் இன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.