நவீன வசதிகளுடன் கூடிய சட்டப்பேரவை மற்றும் தலைமைச் செயலகம் அடங்கிய புதிய கட்டிட வளாகம் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் சென்னை பட்டினப்பாக்கத்தில் அமைக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.சென்னை தலை​மைச் செயல​கம் கடும் இட நெருக்​கடி​யில் இருப்​ப​தால், தலை​மைச் செயல​கம் மற்​றும் சட்​டப்​பேரவையை வேறு இடத்​துக்கு மாற்ற நீண்ட கால​மாக முயற்​சிகள் மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கின்றன.ராணுவத்​துக்கு சொந்​த​மான புனித ஜார்ஜ் கோட்டையில்தான் தற்​போது தலை​மைச் செயல​கம் மற்றும் சட்​டப்​பேரவை இயங்கி வரு​கின்றன. அங்கு தலைமைச் செயல​கத்தை விரி​வாக்​கம் செய்ய இந்​திய தொல்​லியல் துறை அனு​மதி அளிப்​ப​தில்​லை. இதனால் இன்​றும் கடும் இடநெருக்​கடி​யில் தலை​மைச் செயல​கம் இயங்கி வரு​கிறது.இந்நிலையில், கடந்த 3-ம் தேதி சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் விஜய், “நவீன வசதிகளுடன் கூடிய சட்டப்பேரவை மற்றும் தலைமைச் செயலகம் அடங்கிய புதிய கட்டிட வளாகம் சென்னையில் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்படும்" என தெரிவித்திருந்தார்.இதனைத் தொடர்ந்து தற்போது, சட்டப்பேரவை மற்றும் தலைமைச் செயலகம் அடங்கிய புதிய கட்டிட வளாகம் அமைப்பதற்கான இடம் மைலாப்பூர் நகரப் பகுதிக்கு உட்பட்ட பட்டினப்பாக்கத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.அதன்படி, பட்டினப்பாக்கத்தில் வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமான சுமார் 21 ஏக்கர், பெருநகர சென்னை மாநகராட்சிக்குச் சொந்தமான 0.93 ஏக்கர், வருவாய் துறைக்கு சொந்தமான 1.73 ஏக்கர், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துக்குச் சொந்தமான மற்றொரு 1.13 ஏக்கர் என மொத்தம் 25.55 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.இந்த நிலங்களை கையகப்படுத்தி சுமார் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் அனைத்து நவீன வசதிகளையும் கொண்ட சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலகம் அடங்கிய புதிய கட்டிட வளாகம் அமைப்பதற்கு கொள்கை அளவிலான ஒப்புதலை அரசு அளித்துள்ளது.மேலும், இதற்கான விரிவான திட்ட அறிக்கையை மூன்று மாதங்களுக்கும் சமர்ப்பிக்க பொதுப் பணித்துறைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.அத்துடன், கட்டிடக்கலை ஆலோசனைக்கான குழு, தொடக்க கட்டிட வரைபடம் மற்றும் வடிவமைப்புக்கான குழு, வரைபடம் மற்றும் வடிவமைப்பை இறுதி செய்வதற்கான குழு ஆகிய மூன்று குழுக்களை அமைக்கவும் பொதுப்பணித் துறைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.