சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களின் உரிமைகள் மற்றும் பாலின சமத்துவத்தை வலுப்படுத்துவதற்காக உலக நாடுகள் உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் வலியுறுத்தியுள்ளார்.

மார்ச் 8ஆம் திகதி கொண்டாடப்படும் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு வெளியிட்ட கருத்துரையில், உலகம் கடந்த ஒரு தசாப்தமாக காலநிலை மாற்றம், வறுமை, ஆயுத மோதல்கள் மற்றும் குடியுரிமைச் சுருக்கம் போன்ற பல சவால்களை எதிர்கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான சவால்களுக்கு தீர்வுகளை உருவாக்குவதில் பெண்களின் பங்கு மிகவும் முக்கியமானதாக இருப்பதை பல அனுபவங்கள் நிரூபித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பாலின சமத்துவம் என்பது இன்றைய உலகில் மிகப்பெரிய மனித உரிமைச் சவால்களில் ஒன்றாக இருப்பதுடன், சமத்துவத்தை முன்னேற்றுவது நிலையான அபிவிருத்தி மற்றும் உலக அமைதிக்கான முக்கிய சக்தியாகவும் விளங்குகிறது என அவர் வலியுறுத்தினார்.

சமத்துவமான உலகுக்கான 8 நடவடிக்கைகள்

பொதுச்செயலாளர் தனது அனுபவங்களையும் உலகளாவிய சமூக இயக்கங்களின் முயற்சிகளையும் அடிப்படையாகக் கொண்டு பெண்களின் உரிமைகளை முன்னேற்றுவதற்கான எட்டு முக்கிய நடவடிக்கைகளை முன்வைத்துள்ளார்.

1. அதிகார சமநிலையை ஏற்படுத்துதல்

பாலின சமத்துவம் என்பது அதிகாரம் தொடர்பான ஒரு கேள்வியாகும். உலகின் பல முக்கிய நிறுவனங்கள் இன்னும் ஆண்களால் ஆதிக்கம் செலுத்தப்படுகின்றன. அதிகாரத்தை பகிர்ந்துகொள்ளும் போது சமூக சுதந்திரமும் வளர்ச்சியும் விரிவடையும் என அவர் தெரிவித்துள்ளார்.

2. சமமான பிரதிநிதித்துவத்தை முன்னுரிமையாக்குதல்

உலக நாடுகளின் அரசியல் மற்றும் நிறுவனங்களின் தலைமை நிலைகளில் பெண்கள் இன்னும் குறைவாக பிரதிநிதித்துவம் பெறுகின்றனர். ஐக்கிய நாடுகள் அமைப்பில் உயர்மட்ட பதவிகளில் பாலின சமநிலையை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அதனால் நிறுவனம் மேலும் வலுப்பெற்றுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
Politics
3. பெண்களுக்கான முதலீட்டை அதிகரித்தல்

பெண்கள் மற்றும் சிறுமிகளின் கல்வி, தாய்மார் சுகாதாரம் மற்றும் குடும்ப திட்டமிடல் ஆகிய துறைகளில் முதலீடு செய்வது சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு அதிக பயனளிக்கிறது. பெண்களுக்கான முதலீடு தேசிய வருமானத்தை கூட 20 சதவீதம் வரை உயர்த்தக்கூடும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

4. அமைதி பேச்சுவார்த்தைகளில் பெண்களுக்கு இடமளித்தல்

அமைதி உடன்படிக்கைகள் பெண்கள் பங்கேற்கும் போது நீடித்த பலன்களை அளிக்கும். எனினும், காசா, உக்ரைன் மற்றும் சூடான் போன்ற மோதல் பகுதிகளில் பெண்கள் இன்னும் புறக்கணிக்கப்படுகின்றனர்.

5. சட்ட ரீதியான பாகுபாட்டை முடிவுக்கு கொண்டுவருதல்

உலகளவில் பெண்கள் ஆண்கள் பெறும் சட்ட உரிமைகளில் சுமார் 64 சதவீதம் மட்டுமே பெற்றுள்ளனர். பல நாடுகளில் பெண்களுக்கு சொத்து உரிமை, வேலை வாய்ப்பு மற்றும் விவாகரத்து உரிமைகளில் கட்டுப்பாடுகள் உள்ளன.

6. பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு பூஜ்ய சகிப்புத்தன்மை

பெண்களுக்கு எதிரான வன்முறை உலகளாவிய அவசரநிலையாகக் கருதப்படுகிறது. பாலின அடிப்படையிலான வன்முறைகளை முற்றிலும் ஒழிக்க உலக நாடுகள் உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

7. தொழில்நுட்பத்துறையில் பாலின பாகுபாட்டை நீக்குதல்

உலகளவில் தொழில்நுட்பத்துறையில் பணிபுரிபவர்களில் நான்கில் ஒருவரே பெண்கள். இதனால் டிஜிட்டல் அமைப்புகளில் பாலின பாகுபாடு உருவாகும் அபாயம் உள்ளது. எனவே, தொழில்நுட்ப கல்வியில் பெண்கள் மற்றும் சிறுமிகளின் பங்கேற்பை அதிகரிக்கவேண்டியது அவசியம்.

8. காலநிலை கொள்கைகளில் பாலின பார்வையை சேர்த்தல்

காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை பெண்கள் அதிகமாக எதிர்கொள்கிறார்கள். ஆனால் அதே நேரத்தில் காலநிலை மாற்றத்திற்கு எதிரான பல தீர்வுகளிலும் பெண்களே முன்னிலையில் உள்ளனர். எனவே காலநிலை கொள்கைகளில் பாலின சமத்துவம் பிரதிபலிக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

உலகத்தை மாற்றும் சக்தி

உலகின் பல பகுதிகளில் இந்த நடவடிக்கைகள் நடைமுறையில் வெற்றிகரமாக செயல்பட்டு வருவதை பார்த்துள்ளதாகவும், உலகத் தலைவர்கள் பாலின சமத்துவத்தை உண்மையாக முன்னுரிமையாக்கினால் உலகம் பெண்களுக்கும் சிறுமிகளுக்கும் மட்டுமல்லாமல் அனைவருக்கும் சிறந்த இடமாக மாறும் என்றும் ஐ.நா. பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார்.