சந்நிதியான் ஆச்சிரம நிர்வாகத்தால் ஞாயிற்றுக்கிழமை (03.05.2026) கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் நிதி உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
கிளிநொச்சி கனகபுரம் பகுதியிலுள்ள குரு கணினி மைய நிர்வாகத்தின் கோரிக்கைக்கு அமைய இளம்பிள்ளை வாதம் (போலியோ) நோயால் பாதிக்கப்பட்ட குடும்பமொன்று சுயதொழிலாக முன்னெடுக்கும் நிழற்பிரதி இயந்திர சேவையின் இயந்திரத் திருத்தத்துக்காக 80 ஆயிரம் ரூபா நிதி கையளிக்கப்பட்டது. கிளிநொச்சி திருநகர் வடக்குப் பகுதியில் இயங்கும் சுரபி முன்பள்ளி நிர்வாகத்தின் கோரிக்கைக்கமைய முன்பள்ளிச் சிறார்களின் கற்றல் உபகரணங்களின் கொள்வனவுக்காக 25 ஆயிரம் ரூபா நிதி கையளிக்கப்பட்டது.
முல்லைத்தீவு ஐயன்கன்குளம் பிள்ளையார் ஆலய நிர்வாகத்தின் கோரிக்கைக்கமைய ஆலயப் புதிய கட்டுமானப் பணிகளுக்காக ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபா நிதி கையளிக்கப்பட்டது. முல்லைத்தீவு மாமடு நெடுங்கேணி கற்பகா அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கான புதிய சீருடைத் துணிகளும் கையளிக்கப்பட்டன.
இதேவேளை, மேற்படி உதவிகளைச் சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் செ.மோகனதாஸ் சுவாமிகள் ஆச்சிரமத் தொண்டர்களுடன் நேரடியாகச் சென்று கையளித்திருந்தார்.