கொழும்பு, கொள்ளுப்பிட்டி, ஆர்.ஏ. டி மெல் மாவத்தையில் அமைந்துள்ள இசைக்கல்லூரி ஒன்று இயங்கும் கட்டிடத்தை இலக்கு வைத்து இன்று ஞாயிற்றுக்கிழமை (25) அதிகாலை  2.35 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர், குறித்த கட்டிடம் மற்றும் அதன் பிரதான நுழைவாயிலை நோக்கி T-56 ரக துப்பாக்கியால் துப்பாக்கிச் சூடு மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு முன்னால் வெற்றுத் தோட்டாக்கள் சிதறிக் கிடப்பதாகக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமையிலான விசேட குழுவினர் அங்கு விரைந்து விசாரணைகளை முன்னெடுத்தனர்.

சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி (CCTV) காட்சிகளைப் பொலிஸார் ஆய்வு செய்தபோது, மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்திருந்த நபர் திடீரென துப்பாக்கியை எடுத்து கட்டிடத்தை நோக்கிச் சுடும் காட்சிகள் பதிவாகியுள்ளன.

இந்தத் துப்பாக்கிச் சூட்டில் எவருக்கும் உயிராபத்தோ அல்லது காயங்களோ ஏற்படவில்லை. எனினும், பாதாள உலகக் குழுக்களின் அச்சுறுத்தலா அல்லது தனிப்பட்ட பகை காரணமாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதா என்பது குறித்து இதுவரை உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை. கொள்ளுப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.