கனடாவின் தற்காலிக வெளிநாட்டு தொழிலாளர்களை துன்புறுத்திய  மூன்று உணவக உரிமையாளர்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன், பெருந்தொகை அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

கல்கரியில் உள்ள மெரினா தோசை மற்றும் தந்தூரி கிரில் ஆகியவற்றின் உரிமையாளர்கள், புலம்பெயர் தொழிலாளர்களை துன்புறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அதற்கமைய உணவக உரிமையாளர்களான மணிகண்டன் காசிநாதன், சந்திரமோகன் மர்ஜாக் மற்றும் மேரி ரோச் ஆகியோருக்கு தலா 90 நாட்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

மேலும், அவர்களால் மோசடி செய்யப்பட்ட மூன்று தொழிலாளர்களுக்கும்  44,000 டொலர் அளவிலான பணத்தை செலுத்த வேண்டும் எனவும்  உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்தியாவிலிருந்து வந்த குறித்த தொழிலாளர்களிடம் குடியேற்றம் தொடர்பான கட்டணங்களுக்கு தலா 24,000 டொலர் வரை செலுத்த வேண்டும் என உரிமையாளர்கள் கூறியுள்ளனர்.

ஆனால், உண்மையில், தொழில் வழங்குநர்கள் ஒரு சிறிய அரசாங்க கட்டணத்தை மட்டுமே செலுத்த வேண்டும். மேலும், பணம் செலுத்த மறுத்தால் திருப்பி அனுப்பப்படுவார்கள் என தொழிலாளர்கள் அச்சுறுத்தப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.