லங்கா சமசமாஜ கட்சியின் பொதுச் செயலாளர் பதவி மற்றும் கட்சியின் எதிர்கால அரசியல் நகர்வுகள் குறித்து அக்கட்சி தெளிவுபடுத்தியுள்ளது. கடந்த காலங்களில் கட்சி மிகவும் தீர்க்கமான மற்றும் சவாலான அரசியல் பயணத்தை மேற்கொண்டதாகவும் கட்சியின் யாப்பை மீறி எவரும் செயலாளர் பதவியை கைப்பற்ற முடியாது எனவும் தற்போது இடதுசாரி கொள்கைகளை கைவிடாத அனைத்து தரப்பினரையும் ஒன்றிணைத்து மீண்டும் இலங்கையின் பிரதான அரசியல் சக்தியாக உருவெடுத்து வருவதாக லங்கா சமசமாஜ கட்சியின் அரசியல் குழு மற்றும் மத்திய குழு உறுப்பினர் சந்தன ரணசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் அமைந்துள்ள கட்சியின் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்
அங்கு அவர் மேலும் கூறுகையில்
லங்கா சமசமாஜ கட்சியானது கலாநிதி கொல்வின் ஆர். டி சில்வா போன்ற தொலைநோக்கு சிந்தனை கொண்ட தலைவர்களால் உருவாக்கப்பட்ட மிகப்பலமான அரசியல் யாப்பினை கொண்டது. நாட்டின் அரசியலமைப்பு இன்றுவரை 21 அல்லது 22 தடவைகள் திருத்தப்பட்ட போதிலும் எமது கட்சியின் யாப்பு இன்று வரை மாறாமல் நிலைத்து நிற்பது அதன் வலிமையை காட்டுகிறது. தேர்தல் ஆணைக்குழுவும் இந்த யாப்பினை உத்தியோகபூர்வமாக அங்கீகரித்துள்ளது. கட்சியின் பொதுச்செயலாளர் அமரர் பேராசிரியர் திஸ்ஸ விதாரணவின் மறைவிற்கு பின்னர் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்புவது குறித்து இந்த யாப்பில் மிகத்தெளிவான வழிகாட்டல்கள் உள்ளது..
திஸ்ஸ விதாரணவின் மறைவின் பின்னர் தமக்கு வேண்டியவாறு செயலாளர் பதவியை தன்னிச்சையாக கைப்பற்றிக் கொள்ளலாம் என சிலர் பகல் கனவு காண்கின்றனர். ஊர் சந்தைகளிலும் திண்ணைகளிலும் கூடி முடிவெடுப்பது போன்று கட்சியின் உயர் பதவிகளை தீர்மானிக்க முடியாது. அவ்வாறு தன்னிச்சையாக கூடி பதவிகளை அறிவிப்பவர்களுக்கு எவ்வித சட்டபூர்வ அங்கீகாரமும் செல்லுபடியும் கிடையாது. இவ்வாறான குழுக்களின் செயற்பாடுகள் கட்சியின் ஒழுக்கத்தை மீறும் செயல்களாகவே கருதப்படும். இவ்வாறான போலிக் குழுக்களுக்கு எதிராக கட்சி கடும் நடவடிக்கைகளை எடுக்கும்.
தற்போது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை முறையான சட்ட ரீதியான செயற்பாடுகள் ஊடாக தீர்த்து அதன் பின்னரே அடுத்தகட்ட நகர்வுகள் எடுக்கப்படும். நீதிமன்ற நடவடிக்கைகள் நிறைவடைந்ததும் அது குறித்து தேர்தல் ஆணைக்குழுவிற்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும். அதன் பின்னர் ஒரு குறிப்பிட்ட கால அவகாசத்தை வழங்கி கட்சியின் தேசிய மகாநாட்டை முறைப்படி கூட்டி அதன் மூலமே புதிய செயலாளரை தெரிவு செய்ய வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும்.
அவ்வாறு கட்சியின் மகாநாடு ஒன்றின் மூலம் அன்றி குறுக்கு வழியில் தமக்குத்தாமே பதவிகளை சூட்டிக்கொள்ள முயற்சிப்பவர்களை நாடு முழுவதும் சிதறிக்கிடக்கும் இலட்சக்கணக்கான கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அவ்வாறான நபர்களை உறுப்பினர்களே விரட்டியடிக்கும் காலம் வெகுதொலைவில் இல்லை என்றார்.
கட்சியின் யாப்பை மீறி எவரும் செயலாளர் பதவியை கைப்பற்ற முடியாது - லங்கா சமசமாஜ கட்சி எச்சரிக்கை
Ad Space
Ad Space
Ad Space
Ad Space