பியகம பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் விற்பனைக்காகத் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த ரூ. 4.25 கோடி பெறுமதியுடைய இரண்டு கஜமுத்துக்கள் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.இச்சம்பவம் தொடர்பாக மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.ஹொரகொல்ல தேசிய பூங்காவின் பொறுப்பதிகாரிக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், அப்பூங்காவின் அதிகாரிகள் மற்றும் மேல் மாகாண உதவிப் பணிப்பாளர் அலுவலக அதிகாரிகள் இணைந்து இந்தச் சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்.கைது செய்யப்பட்ட மூவரும் ஹிங்குராக்கொடை, தொடங்கொடை மற்றும் ஹிக்கடுவை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.கைப்பற்றப்பட்ட கஜமுத்துக்கள் மற்றும் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேகநபர்களும் எதிர்வரும்  23 ஆம் திகதி மஹர நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.இலங்கையின் தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் பாதுகாப்பு அவசரச் சட்டத்தின் கீழ், யானை போன்ற பாதுகாக்கப்பட்ட பாலூட்டிகளின் பாகங்களை வைத்திருத்தல், காட்சிப்படுத்துதல், கொண்டு செல்லுதல் அல்லது விற்பனை செய்தல் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.சந்தேகநபர்களுக்கு இந்தக் கஜமுத்துக்கள் எவ்வாறு கிடைத்தன என்பது குறித்து வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தீவிர விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.