இங்கிலாந்து உட்பட மேலும் பல நாடுகளில் பனி மழை மற்றும் கடும் குளிர் காரணமாக மக்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதுடன், பத்தாயிரக்கணக்கான மக்கள் மின்சாரம் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இங்கிலாந்து முழுவதும் கனமான பனி, மற்றும் பலத்த காற்று வீசியுள்ள நிலையில், மேலும் கடுமையான வானிலை எதிர்பார்க்கப்படுவதாக அந்நாட்டு வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் ஸ்கொட்லாந்து மற்றும் வட இங்கிலாந்திலுள்ள பகுதிக்கு பனி மற்றும் கடும் குளிர் காரணமாக மஞ்சள் எச்சரிக்கை ஞாயிற்றுக்கிழமை (11) வரை தொடரும் என அந்நாட்டு வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தென் மேற்கு இங்கிலாந்தில் மட்டும் 34,000க்கும் மேற்பட்ட இடங்களில் இன்னும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மிட்லாண்ட்ஸ் மற்றும் வேல்ஸிலும் ஆயிரக்கணக்கான இடங்களில் மின்தடை தொடர்கிறது.
மேற்கு மிட்லாண்ட்ஸில் சுமார் 2,000 இடங்களிலும், கிழக்கு மிட்லாண்ட்ஸில் 1,000-க்கும் மேற்பட்ட இடங்களிலும், வேல்ஸில் 130 இடங்களிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளன.
வெள்ளிக்கிழமை (09) காலை ஹீத்ரோ விமான நிலையத்திலிருந்து புறப்படும் பல விமானங்கள் இரத்து செய்யப்பட்டன. பெரும்பாலானவை குறுகிய தூரப் பயண விமானங்களாகும்.
தேசிய ரயில்வே நிறுவனம், ஞாயிற்றுக்கிழமை (11) வரை ரயில் சேவைகள் பாதிக்கப்படலாம் என எச்சரித்து, பயணிகள் முன்கூட்டியே பயண விவரங்களை சரிபார்க்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
ஸ்காட்லாந்து மற்றும் வடகிழக்கு இங்கிலாந்தின் மலைப்பகுதிகளில் பனியுடன் கூடிய மழை தொடரும் என அந்நாட்டு வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஞாயிறு பிற்பகலில் தென் மேற்கு பகுதிகளில் வெப்பநிலை 12°C வரை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. திங்கட்கிழமைக்குள் மிதமான வானிலை நாடு முழுவதும் பரவும் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.