அவுஸ்திரேலியாவின் நியூசவுத் வேல்ஸ் மாநிலத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இரண்டு பெண்களும் ஆணொருவருமாக மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் கார்கெல்லிகோ வாவி அமைந்துள்ள நகரில் இன்று வியாழக்கிழமை (22) அந்நாட்டு நேரப்படி சுமார் 4:40 மணிக்கு இடம்பெற்றுள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் பலத்த காயமடைந்த நபரொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரின் நிலை கவலைக்கிடமாக இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூடு இடம்பெற்ற பகுதிக்கு பொதுமக்கள் செல்லவேண்டாம் எனவும், உள்ளூர்வாசிகள் உள்ளேயே இருக்க வேண்டும் எனவும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் தலைமறைவாகியுள்ளதோடு, பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த சம்பவம் குடும்ப வன்முறையால் இடம்பெற்றிருக்கலாம் இருக்கலாம் என நம்பப்படுவதாக சிட்னி மார்னிங் ஹெரால்டு செய்தி வெளியிட்டுள்ளது.

துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் உள்ளூர் கவுன்சிலுக்குச் சொந்தமான வாகனத்தில் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றதாக செவன் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

நியூ சவுத் வேல்ஸின் மாநிலத்தின் மத்தியில் அமைந்துள்ள கார்கெல்லிகோ வாவி நகரத்தில் சுமார் 1,500 பேர் வசிக்கின்றனர்.

கடந்த மாதம் சிட்னியின் போண்டி கடற்கரையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 15 பேர் கொல்லப்பட்ட சம்பவத்திற்குப் பின்னரல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.