எனக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்துள்ளமை செய்தியல்ல, என்னை   தூக்கு மேடைக்கு அனுப்புவது தான் பிரதான செய்தி. என்னை கொன்றாலும், சுட்டுபோட்டாலும் அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாடுகளை  கடுமையாக விமர்சிப்பேன். எவருக்கும் அடிபணிய போவதில்லை என்று புதிய ஜனநாயக முன்னணியின் பதுளை மாவட்ட  பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (23) நடைபெற்ற பல்கலைக்கழக திருத்தச் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

சாமர சம்பத்துக்கு எதிராக குற்றப்பத்திரம்  தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின்றன. ஆனால் இது செய்தியல்ல. மரண தண்டனையை  கொண்டுவந்து சாமர சம்பத்தை தூக்கிலிடுவோம் என்று அரசாங்கம் கூறினால் அதுவே செய்தியாகும். அதற்கும் நான் தயார்.

தூக்கில் போட்டாலும், சுட்டாலும் நாங்கள் அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் வழங்கும் தகவல்களை பாராளுமன்றத்தில் முன்வைப்போம். மக்களின் பிரச்சினைகளை எந்தவித பயமும் இன்றி நாங்கள் வெளியிடுவோம். இப்போது கல்வித்துறையில் பல்வேறு பிரச்சினைகள் நிலவுகின்றன.

பிரதமருக்கு கல்வி அமைச்சை சிறந்த முறையில் நிர்வகிக்க  முடியாவிடின் அவருக்கு பிறிதொரு அமைச்சு பதவியை வழங்குங்கள். தேசியப் பட்டியல் இருக்கின்றது. சிறந்த கல்விமான்களை அதில் இணைக்கலாம். கல்வியை கட்டியெழுப்ப வேண்டும் என்றால் கல்வி அமைச்சரை மாற்றுங்கள்.